நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி ஆகியோரின் விவாகரத்து வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையில் உள்ள நிலையில், ரவி மோகன் வெளியிட்டுள்ள புதிய மன்னிப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விவாகரத்து வழக்கு தொடர்பாக தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் ஒருவரைப் பற்றி ஒருவர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என நீதிமன்றம் முன்பே அறிவுறுத்தியிருந்தது. இதனால் நீண்ட காலமாக இருவரும் அமைதியாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் ரவி மோகன் அளித்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் மற்றும் மனவேதனைகள் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார். அந்த சந்திப்பில் நடிகை குஷ்பு பெயரையும் குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறியதாக ரவி மோகனுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், “எனது திருமண தகராறு தொடர்பாக நான் வெளியிட்ட சில கருத்துகள் நீதிமன்ற உத்தரவுக்கு முரணானதாக இருந்தது.
அதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எனது கருத்துகளால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த மன்னிப்பு, குஷ்பு உள்ளிட்ட சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரவி மோகனின் இந்த புதிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி பேசுபொருளாக மாறியுள்ளது.
Listen News!