தென்னிந்தியத் திரையுலகில் அதிகம் பேசப்படும் நட்சத்திர ஜோடிகளில் முன்னிலையில் இருப்பவர்கள் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா. கடந்த சில ஆண்டுகளாக இவர்களின் நட்பு, நெருக்கம் மற்றும் காதல் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை எந்த அதிகாரபூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகாத நிலையில், தற்போது அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது.

வரும் பிப்ரவரி 26ஆம் தேதி ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் நடைபெறவுள்ளதாக வெளியான திருமண அழைப்பிதழில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் உள்ள ஒரு பாரம்பரிய இடத்தில் திருமணம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்த படங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இருவரும் காட்டிய நெருக்கம் காரணமாகவே காதல் வதந்திகள் முதலில் கிளம்பின. குறிப்பாக, இருவரும் ஒன்றாக விடுமுறை பயணங்களுக்கு சென்றதாக சமூக வலைத்தளங்களில் பல முறை புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

ஆனால், இதுவரை இருவரும் தங்கள் உறவு குறித்து தெளிவான பதில் அளிக்காமல் வந்துள்ளனர். “நாங்கள் நல்ல நண்பர்கள்” என்ற பதிலைத் தாண்டி எந்த உறுதிப்படுத்தலும் வெளிவரவில்லை. இதனால், ஒவ்வொரு முறை இவர்கள் தொடர்பான செய்தி வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது.
இப்போது பரவி வரும் திருமண அழைப்பிதழ் உண்மையானதா? அல்லது ரசிகர்கள் உருவாக்கிய கற்பனை செய்தியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை இரு நடிகர்களின் தரப்பிலிருந்தும் அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.
Listen News!