மண்ணை விட்டு மறைந்தாலும் பல மக்கள் மனங்களில் மாறாமல் இன்றுவரை நிலைத்து நிற்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இன்றைய தினம் இவரின் 95-ஆவது பிறந்தநாள் பலராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி இன்று சென்னை அடையாறு பகுதியில் பிரமாண்டமாக அமைந்துள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்திற்கு சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மேலும் அங்குள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது அவருடைய அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
அதுமட்டுமல்லாது சிவாஜி கணேசனின் குடும்பத்தினரும் இந்த நிகழ்வின் போது முதலமைச்சருடன் இருந்தனர். அதாவது கடந்த 2006-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில், சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனின் இந்த உருவச்சிலையானது நிறுவப்பட்டது.
இச்சிலை நிறுவப்பட்டதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையூறாக இருந்ததன் காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அந்த சிலையானது மெரினாவில் இருந்து முற்றாக அகற்றப்பட்டது.
இவ்வாறு அகற்றப்பட்ட அந்த சிலையை அடையாறில் மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டு அங்கு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. எனினும் தற்போதைய திமுக அரசு, மணிமண்டபத்தின் உள்ளே இருந்த சிவாஜியின் சிலையை வெளியே நிறுவி உள்ளனர்.
இந்நிலையில் இன்று சிவாஜியின் பிறந்தநாளை ஒட்டி அந்த சிலையானது திறக்கப்பட்டது. அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதுமட்டுமல்லாது அப்போது கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் சேகர் பாபு, துரைமுருகன், மா.சுப்ரமணியம் ஆகியோரும் அவருடன் இருந்தனர். அத்தோடு சிவாஜியின் மகன் பிரபு, பேரன் விக்ரம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
Listen News!