சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகள் அல்லது பிற அமைப்புகள் தங்களின் சுயநலப் பிரசாரங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மன்றத்தின் தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ சுற்றறிக்கையில் இந்த உத்தரவு தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “நமது அன்பு தலைவர் திரு. ரஜினிகாந்த் அவர்களின் பெயர், புகைப்படம் அல்லது அவரை குறிக்கும் எந்தவொரு அடையாளத்தையும் எந்த அரசியல் கட்சியும், அமைப்பும் அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது” என கூறப்பட்டுள்ளது. இது தலைவரின் நேரடி உத்தரவின் பேரில் வெளியிடப்படுவதாகவும் ரசிகர் மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் காலங்களிலும் அரசியல் நிகழ்வுகளிலும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ரஜினிகாந்தின் புகைப்படங்களை போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரசாரங்களில் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இதனால் பொதுமக்களிடையே தவறான புரிதலும் அரசியல் குழப்பமும் உருவாகும் அபாயம் இருப்பதாக ரசிகர் மன்றம் கவலை தெரிவித்துள்ளது.
இதனைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறி ரஜினிகாந்தின் பெயர் அல்லது படங்களை பயன்படுத்துவோர் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற பயன்பாடுகளை கவனித்து மன்ற தலைமைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Listen News!