தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளுக்கு இடமளித்து வரும் இந்த காலகட்டத்தில், பெண் மையக் கதையுடன் வெளிவந்துள்ள புதிய படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாய் கிழவி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவான இந்த படம் பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாளிலிருந்தே படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வெளியாகி, ரசிகர்களிடமும் நேர்மையான வரவேற்பு கிடைத்துள்ளது.

‘தாய் கிழவி’ திரைப்படம், வயதானாலும் மனவுறுதியும் தன்னம்பிக்கையும் குறையாத பனுவுத்தாய் என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகர்கிறது. இந்தக் கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் மிகுந்த கம்பீரத்துடனும் இயல்பான நடிப்புடனும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தை பார்த்த நடிகர் சிவகுமார், ராதிகா சரத்குமாரின் நடிப்பை பாராட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகில் அனுபவம் மிக்க நடிகரான சிவகுமார், ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகாவின் நடிப்பை பாராட்டியதுடன் அவருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகிறது.
Listen News!