• May 18 2024

பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் உடல் இன்று தகனம்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள அவரது வீட்டில், வாணி ஜெயராம் தனது படுக்கையறையில் இருந்து தவறி விழுந்ததாகவும், இதனால் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. பழம்பெரும் பாடகியின்  மறைவு தமிழ், தெலுங்கு திரையுலகினர் அனைவரையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று , அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் அவரது வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்நிலையில், வாணி ஜெயராமின் உடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக  குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு பல்வேறு நடிகர்கள், பாடகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணி ஆற்றியுள்ளார்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவரான வாணி ஜெய்ராம் அபூர்வ ராகங்கள், சங்கராபரணம் மற்றும் சுவாதி கிரணம் ஆகியவற்றிற்காக மூன்று முறை தேசிய விருதை வென்றார். சமீபத்தில் கூட இந்த ஆண்டுக்கான பத்மபூஷன் விருது வாணி ஜெயராமுக்கு அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து மாநில விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement