மணிரத்னத்தின் பல நாள் கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்' படமானது வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினைப் பெற்று வருகிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படமானது முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து பெரியளவில் சாதனை படைத்துள்ளது.
இப்படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ் எனப் பல திரைப்பிரபலங்களும் நடித்துள்ளனர். மேலும் இதில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதிலும் முக்கியமானது என்னவோ கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் என்ற கேரக்டர் தான். அவரை மையமாக வைத்து தான் படத்தின் கதையே நகரும்படி மணிரத்னம் கதையை இயக்கியுள்ளார்.
அவ்வாறான முக்கிய கதாபாத்திரம் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மணிரத்னம் தவறாக சித்தரித்து உள்ளதாக போலீஸில் புகார் ஒன்று எழுந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தான் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் அவர் கூறியுள்ளதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை பொய்மைப்படுத்தியும், திரித்துக் கூறி படமெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பாக வந்தியத்தேவன் கதாபாத்திரம் ஆனது பெண்கள் பின்னால் திரியும் ஒரு காதல் மன்னன் போல உண்மைக்குப் புறம்பாக ரொம்பவே மோசமாக சித்தரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சோழப் பேரரசரான ராஜராஜ சோழனின் படைத் தளபதியாக இருந்த வந்தியத்தேவனை தவறாக சித்தரித்து மக்கள் மத்தியில் அவரைப்பற்றி தவறான எண்ண அலைகளைப் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் கொண்டு சேர்த்துள்ளதாகவும் அந்த புகார் மனுவில் அவர் பலவாறாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக பொன்னியின் செல்வன் படத்தின் மீது ஒரு வழக்கறிஞரே குறை கூறி புகார் அளித்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது.
Listen News!