சுராஜ் இயக்கத்தில், சுந்தர் சி ஹீரோவாக நடித்து, கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'தலைநகரம்'. இந்த படத்தின் உடைய இரண்டாம் பாகத்தை இயக்குநர் துரை இயக்கி உள்ளார். இரண்டாம் பாகத்திலும் சுந்தர் சி-யே ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய தினம் இப்படம் வெளியாகியுள்ளது. எனவே இப்படத்தினுடைய திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம்.
கதைக்களம்
அந்தவகையில் 'தலைநகர்' படத்தின் முதல் பாகத்தில் வடசென்னையின் மிகப்பெரிய ரவுடியாக ரைட் கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடித்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அதை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார் சுந்தர் சி.
இந்நிலையில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என மூன்று பகுதிகளிலும் பிரபலமான ரவுடியாக இருக்கும் மூவருக்கும் முன்னாள் ரவுடியான சுந்தர் சிக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் அந்த பிரச்சினையை தீர்க்க அவர் மீண்டும் ரவுடியாக மாறுகிறார்.
இதனைத் தொடர்ந்து இறுதியில் சுந்தர் சி என்ன ஆனார்? என்பதே படத்தின் உடைய மீதிக்கதையாக அமைந்துள்ளது.
குறை, நிறைகள்
படம் முழுவதுமே சுந்தர் சி ஒரு டெரராகவே இருக்கிறார். அவரின் சண்டை காட்சிகளிலும் இவர் கலக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் படம் முழுவதையும் சுந்தர் சி தான் தாங்கி செல்கிறார்.
வில்லன்களில் சுந்தர் பாகுபலி பிரபாகர் மட்டும்தான் தெரிந்த முகம். மீதி இருவர் யார் என்று தெரியவில்லை? அது படத்திற்கு மைனஸ் ஆக இருப்பது போல் உள்ளது. இதற்குப் பதிலாக ரசிகர்களுக்குத் தெரிந்த பிரபலமான வில்லன்களை படத்தில் போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக பாலக் லால்வானி நடித்திருக்கின்றார். ஆனால் இதில் அவருடைய கதாபாத்திரம் பெரிதாக இல்லை.
அத்தோடு தலைநகர் முதல் பாகத்தில் வடிவேலுவின் நகைச்சுவை இருந்தது. இந்த படத்தில் எந்த ஒரு நகைச்சுவையும் இல்லை. சென்டிமென்ட் காட்சிகளும் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் தான் இருந்தது.
அதேபோன்று பின்னணி இசையும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. படம் முழுக்க வன்முறையுடனே செல்கிறது.
மேலும் படத்தின் ஆரம்பத்தில் ஒவ்வொரு வில்லனுடைய அறிமுகமும் மிகவும் நீண்டு செல்வது பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோன்று சுந்தர் சி யின் என்ட்ரி சற்றுத் தாமதமாக தான் வந்திருக்கிறது. அவரின் என்ட்ரி வரை படத்தில் கொஞ்சமாவது சுவாரசியம் இருந்தது. அதற்கு பின் எந்த ஒரு சுவாரசியமும் இல்லை.
அதிலும் குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சிப்படி தான் படம் அமைந்துள்ளது என்று பார்வையாளர்கள் யூகிக்க முடியும் அளவிற்கு இருந்தது. மத்தபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய பெரிதாக சுவாரசியமும் சஸ்பென்சும் படத்தில் இல்லை.
தொகுப்பு
மொத்தத்தில் தலைநகரம் 2- தப்புமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் இது ஒரு சுவாரஸ்யமான படமாக இல்லாமல் ஒரு சுமாரான படமாகவே இருக்கிறது.
Listen News!