தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து வரும் நடிகர் தனுஷ், தற்போது தனது 55வது திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த புதிய படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தேசிய அளவில் கவனம் பெற்ற படைப்புகளுக்குப் பிறகு அவர் கையில் உருவாகும் இந்த திரைப்படம், ஆரம்ப கட்டத்திலேயே சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
குறிப்பாக தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இணையும் முதல் படம் என்பதால் இந்த கூட்டணியை ரசிகர்கள் உற்றுநோக்கி வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார்.
தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸும், ஆர்டேக் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ஓம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பு வெளியானதுமே சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. தலைப்பின் பின்னணியில் ஆன்மீகம் கலந்த கதையா? அல்லது முற்றிலும் வேறுபட்ட ஆக்ஷன் திரில்லரா? என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய வசூல் வேட்டைக்கு படக்குழு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம் நடிகர் மம்மூட்டியின் இணைவு தான். மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அவர், இந்த படத்தில் முக்கிய எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிலும் காவல்துறை அதிகாரி வேடத்தில் அவர் நடிக்கிறார் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது. ஒரு புறம் தனுஷ், மறுபுறம் மம்மூட்டி என இரண்டு திறமையான நடிகர்கள் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன.
நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இணைந்திருப்பதும் படத்திற்கு கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்துள்ளது. இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சாய் பல்லவியும், இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்து வரும் ஸ்ரீலீலாவும் ஒரே படத்தில் இணைவது ரசிகர்களுக்கு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!