கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கண்ணதாசனின் தமிழ் மொழிப் பங்களிப்பையும், அவரது பாடல்கள் தமிழர் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தையும் பெருமையுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
அதாவது, “பிறப்பு முதல் இறப்பு வரை தமிழர் வாழ்வைத் தழுவி நடக்கிறது உன் தமிழ்” என்று தொடங்கும் அந்தப் பதிவில், கண்ணதாசனின் பாடல்கள் சாதாரண மக்களின் மனதில் ஆழமாக பதிந்து, பலமொழிகளைப் போல வாழ்ந்து வருவதாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். மொழியின் அனைத்து சௌகரியங்களையும் பாடல்களுக்குள் கொண்டு வந்த பெரும் படைப்பாளி அவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், காதல், தத்துவம், ஆன்மிகம், வாழ்க்கை அனுபவங்கள் என எந்தத் தலைப்பில் எழுதியிருந்தாலும், அவரது தமிழுக்கு மயங்காதவர் யாருமில்லை என தெரிவித்துள்ளார். “இதயத்தோலை உரித்துப் பார்த்து ஞானம் கண்டவன்” எனக் கண்ணதாசனின் சிந்தனை ஆழத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.
திரைப்பட உலகில் கவிதையை மக்களிடம் கொண்டு சென்ற பெருங்கவிஞராக கண்ணதாசனை வைரமுத்து வர்ணித்துள்ளார். அவரது பாடல்கள் காலத்தை வென்று இன்னும் மக்களின் மனதில் வாழ்ந்து வருவதாகவும், “இந்த மண்ணும் கடல் வானும் மறைந்தாலும் மறக்க முடியாதது உன் தமிழ்” என உணர்வுபூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, கண்ணதாசனின் நூற்றாண்டு பயணம் இன்று தொடங்குகிறது என்றும், அதை தமிழர்கள் அனைவரும் சிறப்பாக நிறைவு செய்வோம் என்றும் தனது பதிவில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Listen News!