தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ரவி மோகன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினைகள் மற்றும் விவாகரத்து வழக்கு காரணமாக செய்திகளில் இடம்பிடித்து வந்த ரவி மோகன், தற்போது புதிய குற்றச்சாட்டால் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தகவல்களின் படி, ரவி மோகன் வீட்டில் பணியாற்றி வந்த இரண்டு பெண்களும், அவர்களில் ஒருவரின் சிறுவயது மகனும் நேற்றிரவு முதல் வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் நீலாங்கரை காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ரவி மோகன் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, காணாமல் போனதாக கூறப்பட்ட இரண்டு பெண்களும் சிறுவனும் ரவி மோகன் வீட்டிலேயே இருந்தது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ரவி தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டபோது, வீட்டிலிருந்து சில பொருட்கள் காணாமல் போயிருந்ததாகவும், அவற்றை மீட்கும் நோக்கில் தான் அவர்கள் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், திருட்டு தொடர்பான சந்தேகம் இருந்தால் சட்டப்படி காவல்துறையில் புகார் அளிக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் யாரையும் வீட்டிற்குள் தங்கவைத்து விசாரணை நடத்த முடியாது என போலீசார் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இரண்டு பெண்களும் சிறுவனும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரபூர்வ புகார் அளித்தால் ரவி மோகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், இதுவரை பெண்கள் தரப்பில் இருந்து எந்த எழுத்துப்பூர்வ புகாரும் அளிக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வரும் நிலையில், உண்மை நிலை குறித்து அதிகாரபூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Listen News!