அர்ஜூன்தாஸ், அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ள "கான் சிட்டி" திரைப்படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற பட விழாவில் நடிகர் யோகிபாபு மற்றும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசிய விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

விழாவில் பேசிய யோகிபாபு, அர்ஜூன்தாஸுடன் தனக்கு நீண்டகால நட்பு இருப்பதாக கூறினார். "ஒரு ஹீரோவுக்கு நல்ல நண்பன் இருந்தாலே போதும், ஹீரோயின் கூட தேவையில்லை என்று நான் அடிக்கடி நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு எங்களுடைய நட்பு நெருக்கமானது" என்று சிரிப்புடன் தெரிவித்தார். மேலும், அர்ஜூன்தாஸ் தனது அடுத்தடுத்த படங்களிலும் தன்னை நடிக்க வைப்பார் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் குறித்து பேசிய யோகிபாபு, பல ஆண்டுகளாக அவரை அறிந்திருப்பதாகவும், சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பை நேரில் பார்த்திருப்பதாகவும் கூறினார். இயக்குநராக வேண்டும் என்ற அவரது கனவு இன்று நனவாகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்புக்காக போராடியதாக கூறினார். மேலும், தனது வேண்டுகோளுக்காக யோகிபாபு வழக்கமான சம்பளத்தின் பாதியை மட்டுமே பெற்று இந்த படத்தில் நடித்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பொதுவாக தான் நடித்த படங்களின் நிகழ்ச்சிகளில் அரிதாகவே பங்கேற்கும் யோகிபாபு, ஹரிஷ் துரைராஜுடன் இருந்த நீண்டகால நட்புக்காகவே "கான் சிட்டி" விழாவில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!