சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இணைப்பு விழா அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. த.வெ.க. பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் பல முக்கிய பிரமுகர்கள் கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா மற்றும் வெங்கட் ரமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.

விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கட்சியில் இணையும் அனைவருக்கும் அவர்களின் திறமை மற்றும் உழைப்புக்கு ஏற்ப உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த நிகழ்வில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் த.வெ.க.வில் இணைந்தது முக்கியமான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. அதேபோல், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் நடிகர் மன்சூர் அலிகானும் கட்சியில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்த பின்னர் பேசிய மன்சூர் அலிகான், “நாங்கள் பிரிந்தால் தானே சேருவதற்கு, இணையாமல் இருந்தால் தானே இணைவதற்கு. ஆரம்பம் முதலே விஜய்க்கு நான் ஆதரவு தெரிவித்து வந்தேன். ‘லியோ’ பட விழாவில் தமிழகத்தில் நாளைய தீர்ப்பு என்று கூறினேன்; அது தற்போது நடந்துள்ளது. விஜய்யின் கரத்தை வலுப்படுத்தவே நான் கட்சியில் இணைந்துள்ளேன். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக விஜய் இருப்பது உறுதி.” என்று தெரிவித்தார்.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Listen News!