தமிழ் சினிமாவின் இசை ஞானி என்று உலகளவில் புகழ்பெற்ற இளையராஜா, தற்போது தனது பாடல்கள் தொடர்பான காப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, பிரபல இசை நிறுவனமான சோனி (Sony Music India) நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் புதிய கட்டத்துக்குள் நுழைந்துள்ளது.
இந்த வழக்கு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என். செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சோனி நிறுவனம் தங்களது வருமான விவரங்களை சீலிட்ட கவரில் (sealed cover) தாக்கல் செய்துள்ளது.
இளையராஜாவின் தரப்பில் முன்னிலை வகிக்கும் வழக்கறிஞர்கள் கூறியதாவது, "பல வருடங்களாக இளையராஜா இசையமைத்த பாடல்கள், பல்வேறு இணையதளங்கள், ஊடகங்கள், மற்றும் இசை நிறுவனங்கள் மூலம் அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, Sony Music-ன் சமூக வலைத்தள பக்கங்களில் கூட இவை பயன்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில் அசல் பாடல்களை மாற்றியமைத்து வணிக லாபத்திற்காக வெளியிடப்படுகின்றன. இது, காப்புரிமை சட்டத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு நடவடிக்கையாகும்."
இந்த வழக்கு விசாரணையின் போது, சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான "Dude" திரைப்படத்தில், இளையராஜா இசையமைத்த 2 பாடல்கள், அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இளையராஜா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி "dude" திரைப்படம் குறித்து தனி வழக்கு தொடரலாம் என்று கூறி வழக்கின் விசாரணையை நவம்பர் 19ம் தேதி ஒத்திவைத்துள்ளார்.
Listen News!