ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இசைப் போட்டி நிகழ்ச்சியான ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4’ அண்மையில் மிகப் பிரமாண்டமாக முடிவடைந்தது. தமிழ் நாட்டின் பல மூலைகளிலிருந்து வந்த சின்னஞ்சிறிய இசைச் செல்வங்கள் போட்டியிட்டு, ஒவ்வொருவரும் தங்கள் குரலால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர்.
அந்த வகையில், இந்த சீசனின் டைட்டில் வின்னராக தேர்வாகியவர் தான், திவினேஷ். சிறுவயதிலேயே மனதை உருக்கும் குரலுடன் இசை உலகை தன் பக்கம் திரும்பச் செய்துள்ளார். திவினேஷின் வெற்றி வெறும் டைட்டில் அல்ல... அது ஒரு குடும்பத்தின் கனவு.
தனது இசை பயணத்தைப் பற்றி திவினேஷ் கூறும்போது, முதல் நன்றியை தாத்தாவுக்கு செலுத்தினார். பழைய தமிழ்ப் பாடல்களை தந்தை, தாத்தா வீடுகளில் தினமும் கேட்பது வழக்கமாக இருந்ததால், அந்த பாடல்களின் இயல்பான மெட்டுகள் திவினேஷின் மனதுக்குள் பதிந்து விட்டன.
சமீபத்திய நேர்காணலில் திவினேஷின் தாய் அனிதா, “அவனுக்கு பாட்டோட அர்த்தமோ ஸ்ருதியோ தெரியாது. தாத்தா பாடுறதைக் கேட்டுக்கிட்டே அவனும் பாடுவான்” என்றார் . “இன்னைக்கு அந்த பழைய பாட்டுகள் தான் அவனுக்கு வாழ்க்கையை கத்துக் கொடுத்தது.” என்ற அவளது வார்த்தைகள், உண்மையான நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருந்தது.
திவினேஷ் மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை பிரதாப் ஒரு பால் விற்பனை வண்டியில் வேலை செய்கிறார். தாய் அனிதா, வேலைக்குச் செல்வதுடன் பிள்ளைகளை வளர்க்க பாட்டி, தாத்தாவின் உதவியுடன் வாழ்ந்து வருகின்றனர். “எங்க வீட்டில் யாருக்கும் அவனை எங்கேயும் கூட்டிக்கொண்டு போக ஆசை இல்ல. டீச்சர் சொன்னதால தான் ஆடிஷனுக்குப் போனோம்” என்று அனிதா கூறினார்.
சென்னையில் நடந்த சரிகமப ஆடிஷனுக்குச் செல்லும் முன் கூட இந்தக் குடும்பத்தில் நம்பிக்கை குறைவாகவே இருந்தது. “அவனுக்கு ரெண்டே பாட்டுதான் தெரியும். பழைய பாட்டுகள் தெரியும்னு கேட்டா, அந்த மாதிரி பாடல்களா தேர்ந்தெடுக்கிறாங்களான்னு சந்தேகம் வந்தது” என்கிறார் தந்தை பிரதாப்.
"சரிகமப வெற்றிக்குப் பின் கிடைத்த வீடு, இந்த மரியாதை, எங்களுக்குக் கிடைத்த திருப்பம்... எல்லாத்திற்கும் திவினேஷ் தான் காரணம்” என்றார் தாயார் அனிதா. பால் வண்டி வாங்குவதே 15 வருட கனவென்ற தந்தைக்கு, திவினேஷ் இன்று தன்னுடைய வெற்றியால் அந்த கனவை நிறைவேற்றியுள்ளார்.
மேலும், “எனக்கு வயசு வந்தா நீ பார்த்துக்குவியா?” எனக் கேட்டதும், “நீ ஏன் கவலைப்படுற, நான் தான் உன்னை பார்த்துக்கிறேன்” என பதிலளித்தது, இன்று உண்மையாக்கி விட்டது எனப் பெருமிதத்துடனும் தெரிவித்திருந்தார்கள்.
அத்துடன், "நாங்கள் படுற கஷ்டம் எல்லாமே திவினேஷூக்குத் தெரியும். கஷ்டப்படுறதால தான் அவன் பாடவே ஆரம்பிச்சான். வாய்ப்பு ஒரு தடவை தான் கிடைக்கும். முயற்சியை மட்டும் விட்டுடாத என்று நான் எப்பவும் சொல்லுவேன்." எனவும் திவினேஷின் தாய் உருக்கமாக பேசியிருந்தார்.
Listen News!