தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிணாமத்தை உருவாக்கி வருகின்றார் நகைச்சுவை நடிகர் சூரி. இன்று அவர், பலரும் எதிர்பார்க்கும் ஒரு கதாநாயகனாக வலம் வருகிறார். அந்தப் பயணத்தின் மிக முக்கியமான கட்டமாக அமைந்துள்ளது ‘மாமன்’ திரைப்படம்.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இப்படம், மே 16ம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. படத்தின் வெளியீட்டு திகதி நெருங்கிவரும் நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ், மிகுந்த உணர்வோடு பேசினார். அவரது உரை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியதாவது, "சூரி போன்று ஒரு கதாநாயகன் தமிழ் சினிமாவிற்கு மிகவும் தேவை. வாழ்க்கையை எதார்த்தமாக எதிர்கொள்ளும் மனிதர்கள் எல்லாம் எப்போது கதாநாயகர்களாக மாறுவார்கள் என்ற கேள்வி எனக்குள் இருந்தது. சூரி அண்ணனுடன் எனக்கு ஒரு மனதளவிலான நெருக்கம் உள்ளது. அவர் நடிப்பதைக் காணும் போது, அது நடிப்பு போல இல்லாமல் உண்மையைப் பிரதிபலிப்பது மாதிரி இருக்கும்." என்றார்.
சூரியின் திரைப்பயணம் என்பது வெறும் சினிமா திரையின் காட்சியாக தெரியுமென்றால் தவறு. அது ஒரு மனிதன் கதையை சினிமாவாக எடுத்துக் கூறும் உண்மை முயற்சி. மாரி செல்வராஜ் கூறியதுபோல், சூரி போன்ற நபர்களை கதாநாயகனாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தான் தமிழ் சினிமாவில் மாற்றம் ஏற்படும் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Listen News!