விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அழகே அழகு’ தொடர், தனது ஒளிபரப்பின் 100-வது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தொடங்கிய நாள் முதல் குடும்ப ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்த இந்த தொடர், தற்போது சேனலின் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
பொதுவாக சீரியல்களில் காணப்படும் அளவுக்கு மீறிய நாடகத்தன்மை, நீண்ட இழுவை காட்சிகள் மற்றும் செயற்கையான திருப்பங்கள் இல்லாமல், அன்றாட வாழ்க்கையில் நடக்கும் குடும்ப சம்பவங்களை இயல்பாக சித்தரிப்பதே இந்த தொடரின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
ஒரே வீட்டில் வாழும் இரண்டு மருமகள்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களின் எண்ணங்கள், கனவுகள், சுயமரியாதை, குடும்ப பொறுப்புகள் ஆகியவற்றை மையமாக வைத்து கதை நகர்கிறது.
பாரம்பரிய குடும்ப கட்டுப்பாடுகளுக்குள் வாழும் மூத்த மருமகளும், தனது தனித்துவத்தை இழக்க விரும்பாத இளைய மருமகளும் சந்திக்கும் சவால்கள் ரசிகர்களை கதையோடு ஒன்றிணைத்துள்ளன.

இந்த தொடரில் செல்லம்மா தொடரின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான அன்ஷிதா மற்றும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்த நக்ஷத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் குணா குமரன், பிரேம் ஜேக்கப், குறிஞ்சி நாதன், சுனிதா, மதன் குமார் உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பும் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
மாமியார், மாமனார், மருமகள்கள், கணவன்மார்கள் என ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், உறவு சிக்கல்கள் மற்றும் உணர்ச்சி மோதல்களை எதார்த்தமாக பதிவு செய்வதால், ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
100 நாட்கள் நிறைவை கொண்டாடும் வகையில், ‘அழகே அழகு’ தொடரின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். இதற்கான காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
தொடர்ந்து குடும்ப பார்வையாளர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அழகே அழகு’, அடுத்த கட்டங்களில் என்னென்ன திருப்பங்களை வழங்கப்போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Listen News!