சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ரெட்ரோ’. 80களின் காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. ஒருபுறம், படம் மிகவும் தரமான முயற்சியாக பாராட்டப்படுகிறது. மற்றொருபுறம், சிலர் திரைப்படத்தின் ஓட்டத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.
இந் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ‘ரெட்ரோ’ படத்தைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து நேரடியாகப் பேசியுள்ளார். அவரது பதில்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
‘ரெட்ரோ’ திரைப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது, “இந்தப் படம் எனக்கு ரொம்பவே முக்கியமான படம் என்றதுடன் சூர்யா சார் இந்தக் கதையில் உறுதியாக நம்பிக்கை வைத்ததால், அது முழுமையாக உருவாகி தற்பொழுது மாபெரும் வெற்றியும் பெற்றுள்ளது.” என்றார்.
மேலும், “படத்திலுள்ள ஒவ்வொரு காட்சியும் எனது நெஞ்சில் இருக்கின்ற உணர்வுகளை வெளிக்கொணர்ந்தவையாக இருந்தது. குறிப்பாக 80களின் தமிழ் நாட்டு வாழ்வியல், அரசியல் சூழ்நிலை ஆகியவையெல்லாம் மிக நுட்பமாக காட்டப்பட்டுள்ளன.” என்றார்.
அத்துடன், ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளிவந்ததும், சில சமூக ஊடகங்களில் “படம் மெதுவாக போகிறது. முக்கிய விஷயங்கள் குறைவாக உள்ளது” போன்ற விமர்சனங்கள் வந்தன. இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது, “ஒரு படத்தை அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரியான பார்வையில் பார்க்கமாட்டார்கள். சிலருக்கு படம் பிடிக்கலாம், சிலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். அது இயல்பு. ஆனால், படம் எங்களுக்குள் எவ்வளவு உற்சாகத்தை ஏற்படுத்தியது என்பது முக்கியம். படம் பார்த்த பலரும் ரொம்பவே மகிழ்ச்சியாக, கண்ணீரோடு வெளியே வந்ததைக் கண்டேன்.” எனத் தெரிவித்திருந்தார்.
Listen News!