தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை பல்வேறு அரசியல், திரைத்துறை மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் தொடர்ந்து மரியாதை நிமித்தமாக சந்தித்து வருவது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெறுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் ஸ்டாலினை நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

நேற்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்து பேசியிருந்த நிலையில், இன்று பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நட்புறவும் மரியாதையும் சார்ந்ததாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்புக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பேரன்பின் நிமித்தமாக முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலினுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் அவர் பதிவில் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!