தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பழைய வெற்றிப்படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. முன்னணி நடிகர்களின் ஹிட் படங்களை ரசிகர்கள் மீண்டும் பெரிய திரையில் காணும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
2002 ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம், காதலை மென்மையாகவும் ஆழமாகவும் சொன்ன ஒரு சிறந்த படைப்பாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவான இந்த படம், நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
ஏற்கனவே பல பழைய சூப்பர் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மௌனம் பேசியதே’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
குறிப்பாக, காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காதல் படங்களை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
‘மௌனம் பேசியதே’ படம் மீண்டும் வெளியாக உள்ள நிலையில், நடிகர் சூர்யா சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இப்படத்தில் ரசிகர்களால் விரும்பப்பட்ட ஒரு பிரபல வசனத்தை சூர்யா பேசியுள்ளார். இந்த வீடியோ வெளியாகிய சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!