ஈரான், அமெரிக்கா–இஸ்ரேல் போர் ஒரு வாரத்தைக் கடந்தும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இதன் தாக்கமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தொடர்ந்து ரஷியாவிடமிருந்து இந்தியா ஒரு மாத காலத்திற்கு கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்ததாக வெளியான தகவல்கள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க அதிபரின் தலையீட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து உள்ளதோடு, எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்றும் மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் கடுமையாக கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கண்டித்து கடிதம் எழுதியுள்ளார்.
அதன்படி அந்தக் கடிதத்தில், இந்திய மக்களாகிய நாங்கள் இறையாண்மைமிக்க மற்றும் சுதந்திரமான நாட்டைச் சேர்ந்தவர்கள். தொலைதூர நாடுகளிலிருந்து வரும் கட்டளைகளை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம். தயவுசெய்து உங்கள் பொறுப்புக்குள் வரும் பணிகளை மட்டும் கவனியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறையாண்மை நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையே உலக அமைதிக்கு அடிப்படையாக அமையும் என்றும், அமெரிக்கா மற்றும் அதன் மக்களுக்கு அமைதி மற்றும் வளம் கிடைக்க வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!