தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் விவகாரங்களில் ஒன்று தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் தியேட்டர் ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை தான். வருகிற 9ம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படமும், அதனைத் தொடர்ந்து 10ம் தேதி ‘பராசக்தி’ திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில், இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகள் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, ‘பராசக்தி’ படத்தின் தயாரிப்பாளர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய உறவினர் என்பதும், அந்த படத்தை வெளியிடுவது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் என்பதால், வேண்டுமென்றே ‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ ரிலீஸ் செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்தது. சமூக வலைத்தளங்களிலும், ரசிகர்களிடையிலும் இது அரசியல் ரீதியான அழுத்தமா என்ற விவாதம் தீவிரமடைந்தது.

இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ள கருத்துகள், சினிமா துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
அவர் அளித்த பேட்டியில்,“பராசக்தி படத்தை விட ஜனநாயகன் படத்திற்கே அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பிரச்சினை தியேட்டர் எண்ணிக்கையில் இல்லை, வசூல் பங்கீட்டில் தான்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,“‘ஜனநாயகன்’ படக்குழு தியேட்டர் வசூலில் 75 முதல் 80 சதவீதம் வரை பங்கு கேட்கிறார்கள். நாங்கள் அதிகபட்சமாக 70 சதவீதம் வரை கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம். ஆனால் இந்த சதவீத விவகாரத்தில் ஏற்பட்ட இழுபறியால் தான், படத்தின் புக்கிங் பணிகள் தாமதமாகி வருகின்றன” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
முக்கியமாக, இந்த விவகாரத்திற்கு எந்த அரசியல் காரணமும் இல்லை என்றும், எங்களுக்கு எந்தவிதமான அரசியல் அழுத்தமும் இல்லை. இது குறித்து விஜய்யிடம் பேசியிருக்கிறேன். ” என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
Listen News!