• Apr 17 2026

சுமார் 500 கோடியில் வீடா.? உண்மையை உடைத்துப் பேசிய சரத்குமார்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சென்னையில் நேற்றைய தினம் 'நம்பிக்கை' இணையத்தள ஊடகம் துபாய், இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த தொடக்க விழாவில் டத்தோ சரவணன், சீமான், அன்பில் மகேஷ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், பத்திரிகை துறையுடன் தனக்குள்ள நீண்ட கால தொடர்பை நினைவுகூர்ந்தார். அதன்படி அவர் கூறுகையில், நான் பத்திரிகைகளை சைக்கிளில் தெருத்தெருவாக விநியோகம் செய்தவன். ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீசுக்கு சென்று மணிக்கணக்கில் காத்திருந்த காலமும் உண்டு. அதனால் பத்திரிகைக்கும் எனக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது.

மேலும், பத்திரிகைகள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள் அனைத்தும் உண்மையை மட்டுமே பேச வேண்டும். ஒரு சாதாரண செய்தியை மிகைப்படுத்தி சொல்வது தவறான புரிதலை உருவாக்குகிறது. 


ஒருவர் என்னிடம், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டுக்கு சென்றுவிட்டீர்களா என்று கேட்டார். அந்த செய்தியை எங்கே பார்த்தீர்கள் என்று கேட்டபோது, ஊடகத்தில் பார்த்ததாக கூறினார்.

என்னிடம் உண்மையிலேயே 500 கோடி ரூபாய் இருந்தால், பத்து கோடியில் ஒரு வீடு கட்டிவிட்டு, மீதிப் பணத்தை வங்கியில் முதலீடு செய்து, எந்த வேலையும் செய்யாமல் ஓய்வாக வாழ்ந்திருப்பேன்.

இங்கு இருப்பவர்கள் இதை புரிந்து கொள்வார்கள். ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்த செய்தியை பார்க்கும்போது, சரத்குமாரும் ஹாலிவுட் நடிகர்கள் போல 500 கோடிக்கு வீடு கட்டியுள்ளார் என்று தவறாக நினைத்துவிடுவார்கள்.

அதனால்தான், ஒரு செய்தியை வெளியிடும்போது உண்மையை உண்மையாகவே சொல்ல வேண்டும். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில், ஒரு செய்தி உண்மையா இல்லையா என்பதை புரிந்து கொள்வதே சவாலாகி உள்ளது என்று கூறினார்.


Advertisement

Advertisement