• Jun 01 2025

மொழி விவகாரத்தால் ஸ்டாலினை சந்தித்த கமல்..! நடந்தது என்ன..?

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படமான ‘தக் லைஃப்’ (Thug Life) ஜூன் 5ம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படம் மணிரத்தினம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடன் உருவாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாயிராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், கமலுடன் நடிகர் சிலம்பரசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்தினம், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் எனப் பலர் கலந்துகொண்டனர். விழாவின் சிறப்பு விருந்தினராக கர்நாடகாவின் பிரபல நடிகர் சிவராஜ் குமார் கலந்திருந்தார்.


இவ்விழாவில் பேசிய கமல், "தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்" என்ற கருத்தை வெளியிட்டார். இது, தமிழ் மொழியின் வரலாற்றுத் தொண்மையை வலியுறுத்தும் வகையில் இருந்தாலும், கர்நாடகாவில் இந்தப் பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமலின் இந்தக் கூற்று, சமூக வலைத்தளங்களில் கன்னடர்களின் எதிர்ப்பையும், கோபத்தையும் தூண்டிவிட்டது. இதனால், கர்நாடகா மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், படைப்பாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கமல்ஹாசனை விமர்சிக்கத் தொடங்கினர்.


கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, கமலின் பேச்சை "பொறுப்பற்ற ஒரு கூற்று" எனக் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினார். இவருடன், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும் கமலுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.

இதில் முக்கியமானதாக, கர்நாடக திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் நரசிம்மலு, “கமல் ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், ‘தக் லைஃப்’ படம் கர்நாடகாவில் ரிலீஸாக அனுமதி அளிக்க முடியாது” என்று அறிவித்திருந்தார். இதன் மூலம், மூவி ரிலீஸுக்கு அபாயம் எழுந்துள்ளது.


இந்நிலையில், கமல்ஹாசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பதிலளித்திருந்தார். அவர் கூறியதாவது, "இது ஒரு ஜனநாயக நாடு. எல்லோருக்கும் கருத்துரிமை இருக்கிறது. நான் சட்டத்தையும் நீதியையும் நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் இருக்கின்றன. ஆனால், நான் தவறாக பேசியிருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன். இல்லையென்றால் மன்னிப்புக் கேட்க முடியாது."

அவரது இந்த தெளிவான பதிலால் பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது. கமலின் கூற்றில் ஒரு வரலாற்று உண்மை அடங்கியுள்ளது என்ற கருத்தையும் சில மொழியியல் அறிஞர்கள் முன்வைக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடம் இரண்டும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. வரலாற்றில், தமிழரின் நகர்வுகள், மொழிப் பரிணாமம் ஆகியவை பல நவீன மொழிகளின் உருவாக்கத்தில் பங்காற்றியுள்ளன. ஆனால், அதனை மொழிவடிவில் கூறும் போது நுணுக்கங்களை தவிர்த்து விடும் நிலை, இப்போது ஏற்பட்டுள்ள சர்ச்சையை உருவாக்கியுள்ளது.


நரசிம்மலுவின் கூற்று காரணமாக, தற்போது 'தக் லைஃப்' படம் கர்நாடகாவில் வெளியாகும் நிலை கேள்விக்குறியாக உள்ளது. பலர், இது சினிமாவை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அழுத்தம் என்றும் கூறி வருகின்றனர். கமலுக்கு அரசியலிலும் ஆதரவாளர்கள் இருப்பதால், அவர் மன்னிப்பு கேட்பாரா இல்லையா என்பது மிகப் பெரிய செய்தியாக மாறியுள்ளது.


Advertisement

Advertisement