• Sep 08 2025

மல்லிகைப்பூவால் வந்த வில்லங்கம்..விமான நிலையத்தில் சிக்கிய பிரபல நடிகை..!

luxshi / 2 hours ago

Advertisement

Listen News!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் மல்லிகைப் பூக்களை எடுத்துச் சென்றதற்காக மலையாள நடிகை நவ்யா நாயருக்கு சுமார் ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


விக்டோரியாவில் உள்ள மலையாளி சங்கத்தின் ஓணம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது நடிகை நவ்யா நாயர் இந்த சம்பவத்தை விவரித்தார். 

"இந்த விழாவிற்கு நான் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பூக்களை அணிந்திருக்கிறேன்," என்று நவ்யா நகைச்சுவையாகக் கூறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

"நான் இங்கு வருவதற்கு முன்பு, என் தந்தைதான் எனக்காக மல்லிகைப்பூவை வாங்கி வந்தார். அவர் அதை இரண்டு பகுதிகளாக வெட்டி என்னிடம் கொடுத்தார். 


நான் கொச்சியிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்வதற்குள் அது வாடிவிடும் என்பதால், என் தலைமுடியில் ஒன்றை அணியச் சொன்னார். சிங்கப்பூரிலிருந்து அடுத்த பயணத்தில் அதை அணிய இரண்டாவது ஒன்றை என் கைப்பையில் வைத்திருக்கச் சொன்னார். நான் அதை என் கேரி பேக்கில் வைத்தேன்," என்று நவ்யா  தெரிவித்தார்.  


"நான் செய்தது சட்டத்திற்கு எதிரானது. அது நான் அறியாமல் செய்த தவறு. இருப்பினும், அறியாமை மன்னிக்க முடியாதது. 15 செ.மீ மல்லிகைச் சரத்தை கொண்டு வந்ததற்கு, அதிகாரிகள் என்னிடம் AUD 1,980 (ரூ. 1.14 லட்சம்) அபராதம் செலுத்தச் சொன்னார்கள். ஒரு தவறு, அது வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்றாலும் அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பூர்வீக தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாக்க ஆஸ்திரேலியாவில் உயிரியல் பாதுகாப்பு விதிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகின்றன.


நாட்டின் விதிகளின்படி, வெளிநாட்டு தாவரங்கள் அல்லது விலங்குகளை நாட்டிற்கு எடுத்துச் செல்வது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அது பூர்வீக உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வேளாண்மை, மீன்வளம் மற்றும் வனத்துறையின்படி, அத்தகைய வெளிநாட்டு தாவரங்கள் அல்லது விலங்கினங்கள் முறையான அறிவிப்பு மற்றும் ஆய்வுக்குப் பிறகுதான் நாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மெல்போர்ன் விமான நிலையத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதற்காக மலையாள நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அதனை 28 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




Advertisement

Advertisement