சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மெகா ஹிட் திரைப்படமான ‘படையப்பா’ 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 12.12.2025 அன்று இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், இப்படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அவரது மகளும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த்.

‘படையப்பா’ திரைப்படம் 1999ஆம் ஆண்டு வெளியான போது தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ரஜினிகாந்தின் ஸ்டைல், வசனங்கள், கதாபாத்திர வடிவமைப்பு, நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு ஆகியவை இணைந்து இப்படத்தை காலத்தால் அழியாத ஒரு கிளாசிக் படமாக மாற்றியது. 25 ஆண்டுகள் கடந்த பிறகும், அந்த தன்மை குறையவில்லை என்பதையே தற்போது வெளியான ரீ-ரிலீஸ் வரவேற்பு நிரூபித்துள்ளது.
ரீ-ரிலீஸை முன்னிட்டு ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்கில் ‘படையப்பா’வை பார்த்த சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.

அதாவது, “படையப்பா திரைப்படம் ரசிகர்களோடு பார்த்தேன். 25 வருடங்களுக்கு முன்பு அப்பா எழுதின கதை இப்பவும் புதுப் படம் பார்ப்பது போல இருக்கு. பாடல்கள் ஒன்ஸ்மோர் கேட்டு பார்த்திருக்கிறேன். ஆனால், முதன் முறையாக சீன்ஸிற்கு ஒன்ஸ் மோர் கேட்டு இன்று தான் பார்க்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல ரசிகர்கள், “படையப்பா என்பது வெறும் படம் அல்ல; அது ஒரு எமோஷன்” என்று தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!