தமிழ் சினிமாவில் நெடுங்கால பயணத்தில், அழகு மற்றும் நடிப்பு என்பன மூலம் வலம்வந்து கொண்டிருக்கும் நடிகை சுஹாசினி, தற்போது 'தி வெர்டிக்ட்' திரைப்பட விழாவில் கலந்துகொண்ட போது நிகழ்ந்த சம்பவங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் நடிகர் பார்த்திபன், நடிகை வரலட்சுமி, இயக்குநர் கிருஷ்ணா சங்கர், தயாரிப்பாளர் பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முழுவதும் நகைச்சுவை உணர்வுகள் கலந்து மிகவும் கலகலப்பாக அமைந்திருந்தது.
இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கியவர் கிருஷ்ணா சங்கர். இதில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சுஹாசினி, சுருதி ஹரிஹரன் உள்ளிட்டவர்கள் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் பிரகாஷ் மோகன்தாஸ் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பெண்களின் உரிமை, வாழ்க்கை, தைரியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட படமாக அமைந்துள்ளது. இந்த விழாவில் பேசிய சுஹாசினி, தன்னுடைய நடிப்புப் பயணத்தில் ஏற்பட்ட ஒரு உணர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்தார்.
அதன்போது அவர் கூறியதாவது, “பலரும் சின்ன வயதில் உங்கள் நடிப்பைப் பார்த்திருக்கிறேன் என்று சொல்லுகிறார்கள். அது ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும், ‘அவ்வளவு சீனியரா நான்?’ என்ற ஒரு சந்தேகம் தோன்றுகிறது.” எனக் கூறியிருந்தார்.
மேலும், “வயதாகிவிட்டதன் சிறப்பை நான் அமெரிக்காவில் தான் உணர்ந்தேன். ஒரு படப்பிடிப்பின் போது எனது ரசிகை ஒருவர், முழுப் படக்குழுவிற்கும் சாப்பாடு செய்து கொண்டு வந்தார். அந்தக் கணத்தில் தான் என் வயதின் முக்கியத்துவம் புரிந்தது.” என்றார் சுஹாசினி.
இதைத்தொடர்ந்து மேடையில் நடிகர் பார்த்திபன் பேசும்போது, “28 வயதிற்கு பிறகு பெண்கள் வயதை சொல்லமாட்டார்கள். ஆனால் என் நண்பி சுஹாசினி, ‘நான் 50’ என்று வெளிப்படையாக சொல்லும் அழகி. அது அழகின் மீது கொண்ட திமிரு,” என்று நக்கலாகக் கூறியிருந்தார். அதற்கு சுஹாசினி தனக்கு 50 இல்ல 63 வயதாகிவிட்டது என்று சொன்னார். இதைக் கேட்ட பார்த்திபன் இதுதான் திமிரு பாத்தீங்களா என்று சிரித்தபடி கூறினார். இத்தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!