தமிழ் திரையுலகில் பழைய ஹிட் படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் வெளியிடும் நடைமுறை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், ரன் திரைப்படம் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆர். மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த இந்த படம், வெளியான போது பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படும் காதல்-ஆக்ஷன் படமாகும்.

இந்த படத்தை இயக்கிய என். லிங்குசாமி, ஏப்ரல் 24ஆம் தேதி ‘ரன்’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகும் என அறிவித்திருந்தார். ஆனால் தற்போது அந்த வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக, அதே நாளில் சிவகாசி திரைப்படமும் ரீரிலீஸ் ஆக இருப்பதால், ரசிகர்கள் மற்றும் திரையரங்குகளின் கவனத்தை பிரிக்க வேண்டாம் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து லிங்குசாமி, “இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியானால் இரண்டிற்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் ‘ரன்’ திரைப்படத்தை வேறு தேதியில் வெளியிட தீர்மானித்துள்ளோம். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.
இதனால், இன்று ‘ரன்’ படம் வெளியாகாமல் போனாலும், விரைவில் புதிய தேதியுடன் ரசிகர்களை மீண்டும் கவர தயாராகி வருகிறது.
Listen News!