சென்னையை சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கே. ராஜன் நேற்று (வயது 85) காலமானார். 1983ஆம் ஆண்டு வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், அதன் பின்னர் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்து, திரையுலக வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டவர் ஆவார்.
இவர் சமீபத்தில் திடீரென உயிரிழந்தார். அவரது இறப்பு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இயக்குநர் மற்றும் நடிகர் டி. ராஜேந்தர் வெளியிட்ட இரங்கல் செய்தி கவனம் பெற்றுள்ளது.
அதில், “தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட அண்ணன் கே. ராஜன் ஏன் இவ்வாறு விரக்தியடைந்து இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கே. ராஜனின் மறைவு தமிழ் திரைப்பட உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!