தமிழ் திரையுலகில் சமூகப் பார்வையுடனும் அரசியல் சிந்தனைகளுடனும் கூடிய படங்களை இயக்கி தனித்த அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் எச்.வினோத். ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ போன்ற வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், தற்போது நடிகர் விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 9-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் ரசிகர்களிடையே மட்டுமின்றி, அரசியல் மற்றும் சமூக கருத்துகளில் ஆர்வம் கொண்டவர்களிடையேயும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், மலையாள சினிமாவில் தனித்த முத்திரை பதித்த நடிகை மமிதா பைஜூ முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இவர்களுடன் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன் போன்ற பல்துறை திறமையாளர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநர் எச்.வினோத் சமீபத்தில் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எச்.வினோத் தனது கருத்தில், “முட்டாள்கள் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று தெரியாதவர்கள். அறிவாளிகளுக்கு நல்லது, கெட்டது தெரியும். அறிவாளி அயோக்கியர்கள் எது நல்லது என்பதை வெளியில் சொல்லாமல், அதை தன்னுடைய சுயநலத்துக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள். முட்டாள் அயோக்கியர்கள், அறிவாளி அயோக்கியர்களின் அடியாள் போல மோசமான விஷயங்களை செய்வார்கள். இந்த நான்கு வகை மனிதர்களை சரியாக சமாளித்தாலே போதும், விஜய் அரசியலில் ஜெயிச்சிடுவார்னு நம்புறேன்…” என்று கூறியுள்ளார்.
எச்.வினோத்தின் இந்த கருத்து, அரசியலில் வெற்றி பெறுவதற்கு எதிர்கொள்ள வேண்டிய சவால்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும், விஜய்யின் அரசியல் பயணத்திற்கு அவர் நம்பிக்கையுடன் ஆதரவு தெரிவிப்பதாகவும் இந்த கருத்து பார்க்கப்படுகிறது.
Listen News!