தமிழ் சினிமாவில் தற்பொழுது நகைச்சுவை நடிகர்கள் அனைவரும் மாஸ் ஹீரோக்களாக மாறி அதிகளவான ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளனர். அந்த வரிசையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய நடிகர்களாக சூரி, சந்தானம் மற்றும் யோகி பாபு விளங்குகின்றனர். இவர்கள் மூவரும் தற்போது தங்களது தனித் திறமைகளை மையமாக வைத்து தனிப்பட்ட முறையில் கதாநாயகர்களாக உருவெடுத்து இருக்கின்றார்கள்.
இந்த நிலையில், வருகின்ற மே 16ம் திகதி, இந்த மூவரும் தங்களது புதிய படங்களுடன் திரையரங்குகளில் மோதலுக்கு இறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
"வெண்ணிலா கபடி குழு" படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக மக்கள் மனங்களில் இடம் பிடித்த சூரி, "விடுதலை" படம் மூலம் கதாநாயகனாக புதிய பிம்பத்தை உருவாக்கினார். அவரது நேர்த்தியான நடிப்பும், உணர்வு பூர்வமான வெளிப்பாடும் ரசிகர்களைக் கவர்ந்தது.
இப்போது, சூரி "மாமன்" படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தை "பொன் மாணிக்கவேல்" படத்தின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். கிராமப்புறக் கதையம்சத்துடன் மக்களின் உணர்வுகளையும் நகைச்சுவையையும் இணைத்த இந்த படம், சூரியின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேபோன்று சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படமும் அதே நாளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சந்தானம் தனது இயல்பான நகைச்சுவை நடிப்பை மையமாக வைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் யோகி பாபுவின் "ஜோரா கைய தட்டுங்க" படமும் அதேநாளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர். இத்தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!