உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், "தமிழ் மொழியிலிருந்து தான் கன்னடம் உள்ளிட்ட பிற திராவிட மொழிகள் உருவாயின" என்ற கூறிய ஒரு வரி, தற்போது தமிழகம் மற்றும் கர்நாடக அரசியல் வட்டாரங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கமலின் இந்தக் கருத்துக்கள் வெளியானதும், கர்நாடக மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பலர் இந்தக் கருத்தை தமிழ் மேன்மையை உயர்த்தி, பிற மொழிகளை தாழ்வாகப் பேசும் வகையில் எடுத்துக் கொண்டனர். குறிப்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா உட்பட பலரும் இந்தக் கருத்தை கண்டித்துள்ளனர்.
அதற்குப் பதிலளித்த கமல், “நான் கூறிய கருத்து என் பார்வையிலிருந்து சரிதான். உங்களது பார்வையிலிருந்து பார்த்தால் அது தவறு எனத் தோன்றலாம். மேலும் நான், என் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். மொழிகளைப் பற்றிய இந்த விவாதத்தை அரசியல் பக்கமாக மாற்ற வேண்டாம். மேலும், நான் கூறிய 'தமிழிலிருந்து கன்னடம் தோன்றியது' என்ற கருத்திற்காக மன்னிப்பு கேட்க முடியாது,” என கடுமையான பதிலைத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கான அடிப்படை என்ன என்பது குறித்து நெட்டிசன்கள் ஆராயத் தொடங்கினர். சிலர், தமிழ் மொழியின் வரலாறு பண்டைய சங்க காலத்தில் தோன்றியது, அதன் அடிப்படையில் பிற திராவிட மொழிகள் பரிணாமம் அடைந்தது என்ற கோட்பாட்டை ஆதாரமாக எடுத்துள்ளனர். இதே நேரத்தில், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளும் தனித்துவம் வாய்ந்த நவீன இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களைக் கொண்டவை என்பதையும் சிலர் வலியுறுத்துகின்றனர்.
இந்த விவகாரத்தில் இணையவாசிகள் இரு தரப்பாகப் பிளந்துள்ளனர். தமிழர்கள் சிலர், கமலின் கருத்தை பெருமிதமாக எடுத்துக் கொண்டனர். “எப்போதும் கலைஞர்கள் பேசக்கூடாத விஷயங்களை கமல் துணிந்து பேசுவார்.” எனக் கூறினர்.
மற்றொரு பக்கம், கன்னட இணையதளங்களில் #BanKamalHaasan என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆனது. சிலர் "தமிழரின் அகந்தையைப் பெருக்குவதற்காக கன்னடத்தை இழிவுபடுத்தவேண்டாம்" என சாடினர். இதே நேரத்தில், சில நியாயமான தரப்பினர் “இது வரலாற்றுத் தரவுகள் அடிப்படையில் ஆராயப்படும் விஷயம். அதை அரசியல் தாக்கமாக மாற்ற வேண்டாம்” என்றும் கேட்டுள்ளனர்.
Listen News!