தென்னிந்தியாவின் முன்னணி நடிகரான பிரபுதேவா 'இந்து' திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது திரையுலகப் பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் காதலன் , லவ் பேர்ட்ஸ் , மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். தன் மழலைச் சிரிப்பு மற்றும் அதிரடியான நடனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்தார். பிரபுதேவா நடன இயக்குநராக பல்வேறு படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி தற்பொழுது தமிழ் சினிமா உலகில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார்.
மூன்று தசாப்தங்களைக் கடந்தும், பிரபு தேவா சினிமா உலகில் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றார். தனது பன்முகத் திறமைகளால் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரு பிரபலமான நடிகர் மற்றும் நடன இயக்குநர் போன்ற பெயர்களைப் பெற்றுள்ளார்.
தற்போது, பிரபு தேவா 'கண்ணப்பா' என்ற திரைப்படத்தில் நடன இயக்குநராக பணிபுரிந்து வருகின்றார். இப்படத்தில் தெலுங்குத் திரையுலகின் பிரபலமான நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் மூத்த நடிகர் மோகன் பாபு முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான பிரபாஸும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
'கண்ணப்பா' திரைப்படம் பிரமாண்டமான தயாரிப்புடன் உருவாகி வருவதுடன் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், 'கண்ணப்பா' படக்குழுவினருடன் பிரபு தேவா உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்துள்ளார். அவருடன் நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் நடிகர் மோகன் பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்தது. 'கண்ணப்பா' திரைப்படத்தின் முக்கிய தகவல்களை மற்றும் படம் குறித்த எதிர்பார்ப்புகளை முதல்வரிடம் பகிர்ந்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமா உலகில் மூன்று தசாப்தங்களை கடந்தும் தனது ஒளியை இழக்காமல் வெற்றிகரமாக திகழும் பிரபு தேவா, 'கண்ணப்பா' மூலம் இன்னொரு முக்கியமான வெற்றிக்கதையை மக்களுக்கு வழங்கவுள்ளார். உத்தர பிரதேச முதல்வரை சந்தித்ததன் மூலம் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
Listen News!