• Apr 23 2024

காணாமல் போன பலாப்பழத்தை திருடியது யார்... காமெடியாக வெளிவந்த 'Kathal' படத்தின் திரை விமர்சனம்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

Kathal என்ற திரைப்படமானது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதவாது இந்தியில் Kathal என்றால் பலாப்பழம். பலாப்பழத்தை வைத்து ஒரு பக்காவான அரசியல் நய்யாண்டி படமாக இந்த படம் உருவாக்கி உள்ளது. இப்படத்தினுடைய திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்களம்

பலாப்பழத்தை வைத்து இப்படியொரு படத்தை இயக்குநர் யசோவர்தன் மிஷ்ரா இயக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது அமைதிப்படை, எல்கேஜி போல இதுவும் அரசியல் நய்யாண்டி கதைக்களத்தை தான் மையமாகக் கொண்டுள்ளது. 

அந்தவகையில் இந்த படத்தில் ஹீரோயினாக தங்கல் படத்தில் சிறுமியாக நடித்த சானியா மல்கோத்ரா என்பவர் போலீஸ் அதிகாரி மகிமா பசூர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் எம்.எல்.ஏ. வீட்டில் உள்ள இரண்டு (உயர் (சாதி) ரக) பலாப்பழங்கள் திடீரென காணாமல் போகிறது. அந்த பலாப்பழங்களை ஊர்கா போட்டு பெரிய அரசியல் தலைவருக்கு ஐஸ் வைத்து மந்திரி பதவியை பெற நினைக்கிறார் அந்த எம்.எல்.ஏ. ஆனால், அவருடைய ஆசையில் மண் விழுந்தது போல யாரும் எதிர்பாராத வகையில் பலாப்பழங்கள் இரண்டும் இரவோடு இரவாக காணாமல் போய் விடுகின்றன. 

இதனையடுத்து உடனடியாக தனது பதவி பலத்தை பயன்படுத்தி மேல் இடத்துக்கு பிரஷர் கொடுத்து ஒரு போலீஸ் ஸ்டேஷனையே வெறும் காணாமல் போன பலாப்பழத்தை தேட வைக்கிறார் அந்த எம்.எல்.ஏ. இதன் பின்னர் போலீஸ் அதிகாரி மகிமா அந்த பலாப்பழத்தை கண்டுபிடித்தாரா? இல்லை அதற்கு பதிலாக எதைக் கண்டுபிடித்தார் என்பது தான் இந்த படத்தின் உடைய மீதிக் கதையாக அமைந்துள்ளது.


சாதி அரசியல்

இப்படத்தில் பசூர் சாதியை (கீழ் சாதி) சேர்ந்த பெண் ஒருவர் எப்படி படித்து முன்னேறி போலீஸ் அதிகாரியாக உயர்ந்தாலும், உயர்ந்த சாதி எம்.எல்.ஏ தனது வீட்டின் கார்ப்பெட்டைக் கூட மிதிக்கக் கூடாது என திட்டுவது, ஹீரோயின் சென்ற பின்னர் கோமியத்தை அங்கே ஊற்றி சுத்தப்படுத்துவது என்பனவற்றின் மூலம் சாதிய அரசியலை காமெடியாகவே சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

மேலும் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஹீரோயினுக்கும், கான்ஸ்டபிளாக இருக்கும் ஹீரோவுக்கும் காதல் இருந்தாலும், ஹீரோவின் அப்பா அந்த பெண் கீழ் சாதி என சொல்லி அவளை கல்யாணம் பண்ணினால் நீ உருப்பட மாட்டாய் என திட்டும் காட்சிகளில், என்னத்த படிச்சி என்னத்த முன்னேறினாலும், இந்த கேவலமான சாதிய புத்தி ஒரு படி கூட உயரவில்லையே, பின்னர் எப்படி அது உயர்ந்த சாதியாக இருக்கும் என்கிற எண்ணம் படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் கேள்வியை எழுப்புகிறது.

செம டுவிஸ்ட் 

அந்தவகையில் அந்த வீட்டில் இருந்த தோட்டக்காரன் திடீரென 3 நாட்களாக மிஸ்ஸிங் என்பதை தேடி போலீஸார் அலைய, அந்த தோட்டக்காரரோ தனது 16 வயது மகள் காணவில்லை என காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்க சொன்னால், ஹீரோ அவ எவன் கூடயாவது ஓடிப்போயிருப்பா என சொல்லி அவரை விரட்டி விடுகிறார். இதற்காக ஹீரோ, ஹீரோயினுக்கு இடையே வெடிக்கும் பிரச்சனை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாகவே உள்ளது. 

இதன் பின்னர் குறித்த தோட்டக்காரன் சிக்கிய நிலையில், அவனை வைத்து கேஸை முடித்து விட உயரதிகாரி மகிமாவுக்கு உத்தரவு போடுகிறார். அவரும் வேறு வழியில்லாமல் தோட்டக்காரனை குற்றவாளி போல அழைத்து வர கடைசியில் அவருடைய மனம் கேட்காமல் அந்த பலாப்பழத்தை இவர் திருடவில்லை என்றும் காணாமல் போன அந்த தோட்டக்காரரின் மகள் தான் திருடிவிட்டார் எனவும் அந்த வழக்கை திசை திருப்பி விடுகின்றார். 

அதாவது அந்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து விட்டால் காணாமல் போன பலாப்பழத்தையும் கண்டுபிடித்து விடலாம் என சொல்ல அந்த பெண்ணை தேட இவருக்கு அனுமதி ஆட்டோமேட்டிக்காக உடனே கிடைக்கிறது. கடைசியில் அந்த பெண் எங்கே சென்றார், மகிமா தேடிக் கண்டு பிடித்தாரா? அந்த பலாப்பழம் என்ன ஆனது என்பதை ரொம்ப ரிஸ்க் எடுத்துக் கொள்ளாமல் காமெடியாகவே சொல்லி படத்தை இயக்குநர் முடித்திருப்பது ரொம்பவே ரசிக்க கூடிய விடயம்.


பலம் 

மகிமாவாக நடித்துள்ள சானியா மல்கோத்ராவின் நடிப்பு அமோகமாக இருக்கின்றது. அத்தோடு பத்திரிகையாளராக வரும் நபர், அந்த உயர் அதிகாரி, உள்ளே ஆட்டம் போட்டுட்டு இருக்கிறதை அறுத்து விட்டா சரியாக இருக்கும் என உயர் அதிகாரியிடம் பேசி விட்டு உங்க பைல்ஸை சொன்னேன் சார் என ஹீரோயின் பேசும் வசனம் வேலை இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சவுக்கடி வசனமும் சிறப்பாக உள்ளது. 

அதேபோன்று காதலனாக நடித்துள்ள ஆனந்த் வி ஜோஷி பணக்காரர்கள் திருமணத்தில் ஏழைகளை அடிக்க ஹீரோயினிடம் வாங்கிக் கட்டுவது, தோட்டக்காரர் தனது மகளை காணவில்லை என்று வரும் போது அசிங்கமாக பேசி அவமதித்து அனுப்புவதற்காக கிடைக்கும் தண்டனை, பின்னர் அதிலிருந்து தெளிந்து நாயகியிடம் நல்ல பெயரை வாங்க அந்த பெண்ணை தனியாளாக தேடச் செல்வது என சிம்பிளான ஹீரோவாக நடிப்பில் அசத்தி உள்ளார். 

அதுமட்டுமல்லாது படத்தில் இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை, கிழிந்த பேன்ட் போட்டால் கேவலமானவளா என கேட்கும் வசனம், நானும் கீழ்ச்சாதி பெண் தான் அதுக்குன்னு நான் திருடியா என ஒருவரை ஹீரோயின் வெளுத்து வாங்குவது என அனைத்துமே அமோகமாக இருக்கின்றது.

பலவீனம் 

பெண்கள் காணாமல் போனால் போகட்டும் நமக்கு பலாப்பழம் தான் முக்கியம் என போலீஸ் அதிகாரிகள் செயல்படுவது, அமைச்சரே இந்த விஷயத்தை பப்ளிக்காக பேட்டி கொடுப்பது, கிளைமேக்ஸில் இது ஒரு பெரிய மாஃபியா என்றெல்லாம் காட்டாமல் ஒரு லோக்கல் சின்ன பசங்க காமெடியாக செய்யும் வேலை என்று கதையை முடித்திருப்பது கொஞ்சம் படத்தின் கிளைமேக்ஸ் வெயிட்டாக இல்லையே என்கிற எண்ணத்தை ரசிகர்கள் மனதில் வரவழைத்து விடுகிறது.

தொகுப்பு 

ஆகவே எந்தவொரு ஆபாசக் காட்சிகளோ, முத்தக் காட்சிகள் மற்றும் ஓடிடி தானே என இஷ்டத்துக்கு கெட்ட வார்த்தைகள் பேசுவது என எந்த சிக்கலும் இல்லாமல் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் படமாக இந்த Kathal படம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement