• Apr 19 2024

பொய் சொல்லி சூரியை பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்த வேல்ராஜ்.. கடுப்பான சூரி.. வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ எனப் பல நட்சத்திரங்களின் நடிப்பில் தற்போது 'விடுதலை' படம் உருவாகி வருகின்றது. இப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் பிரமாண்டமாக நடைபெற்றது.


இந்நிலையில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த சம்பவம் ஒன்றினை சொல்லி அவர் மீது தனக்கு இருந்த கடுப்பை இசை வெளியீட்டு விழா மேடையிலேயே வெளிப்படுத்தி விட்டார் நடிகர் சூரி. அந்தவகையில் அவர் சொன்ன அந்த குட்டி ஸ்டோரி ஆனது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


அதாவது படப்பிடிப்பு தளத்தில் சூரியை காண வயதான ஒரு பாட்டி தினமும் வந்து போவதாகக் கூறி "நீங்க அவங்கள பார்க்க வேண்டும்" என வேல்ராஜ் சூரியிடம் கோரிக்கை வைத்துள்ளார். நமக்கும் ஒரு வயதான ரசிகையா? கண்டிப்பா அவங்கள பார்க்க வேண்டும் என நினைத்த சூரி மறுநாள் ஷூட்டிங்கிற்கு சீக்கிரமே வந்திருக்கிறார். ஆனால், அன்றைய தினம் அந்த பாட்டி வரவில்லை. 

அதனைத் தொடர்ந்து அந்த பாட்டியை பலமுறை சந்திக்க சூரி நினைத்தாலும் அவரை பார்க்க முடியாமல் போய் விட்டதாம். பின்னர் "அந்த பாட்டியின் வீடு தெரு முனையில் தான் இருக்கு போய் சென்று பாருங்க சூரி" என வேல்ராஜ் அனுப்பி வைக்க, சூரியும் ஆசையுடன் அந்தப் பாட்டியை போய் பார்த்திருக்கிறார். 


சூரி தனது வீட்டிற்கு வந்ததை அறிந்ததும் கஞ்சி குடித்துக் கொண்டிருந்த அந்த பாட்டி எச்சில் கையுடனே ஓடி வந்து கட்டித் தழுவி சூரியை கொஞ்சிவிட்டு "என்ன படத்துல கலரா இருக்கீங்க, நேர்ல கருப்பா இருக்கீங்க" என கேட்டு இருக்கிறார்.

அதன் பின்னர் சூரியைப் பார்த்து "உங்க அப்பான்னா எனக்கு ரொம்ப உசுரு அவர் நடித்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி உள்ளிட்ட படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்" என நடிகர் சிவகுமார் பற்றி பாட்டி சொல்லி இருக்கின்றார். "அப்போ என்ன சூர்யான்னு நினைச்சிட்டு இருந்திருக்காரா" அந்த பாட்டி என புரிந்து கொண்ட சூரி, "அப்பத்தா நான் சூர்யா இல்லை, சூரி" என சொன்னதுமே பேசிக் கொண்டிருந்த பாட்டி பட்டென உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டு போய்விட்டாராம்.

இவ்வாறாக சூரிக்கும் சூர்யா சாருக்கும் வித்தியாசம் தெரியாமல் என்னை கோர்த்து விட்டுட்டாரே வேல்ராஜ் என ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவரை தேடிக் கொண்டு வந்திருக்கின்றார் சூரி. அதற்கு அந்த மனுஷன் "என்ன உங்க ஃபேன் எப்படி கவனிச்சாங்க" என கேட்டு செம கலாய் கலாய்த்து சிரித்து விட்டார் என ஒளிப்பதிவாளர் தன்னை வைத்து செய்த சம்பவத்தை எல்லார் முன்பும் கூறி இருக்கின்றார் சூரி.

இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement