இந்தியத் திரையுலகில் குறிப்பாக 1960-களில் குழந்தை நட்சத்திரமாகவும், 1970 தொடக்கம் 1990-களின் காலகட்டத்தில் கதாநாயகியாகவும் பல ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ் மொழியில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் கொடிகட்டிப் பறந்தவர்.
மேலும் 1997 வரை கதாநாயகியாக நடித்த அவர், 2012-ஆம் ஆண்டிலிருந்து மீண்டும், கதையின் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அந்தவகையில் 2012-ஆம் ஆண்டு வெளியான 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
அதாவது தனது குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் ஒரு பெண், ஒரு கட்டத்தில் தன்னுடைய தனித்தன்மையை மீட்டெடுக்கும் வகையில் அமைந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். பல இல்லத்தரசிகளுக்கும் உத்வேகம், உற்சாகம் அளிக்கும் ஒரு கதாபாத்திரமாக இது அமைந்திருந்தது.
மேலும் இந்தப் படத்தில் அஜித்குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இவ்வாறான ஒரு வெற்றிப் படத்தை இயக்கியவர் கவுரி ஷிண்டே. படம் வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்த நிலையில், அந்தப் படம் பற்றி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதாவது அவர் கூறுகையில் "இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை என்னால் மறக்க முடியாது. ஏனெனில் அந்தப் படம் நடிக்கும் போது, அம்மா எவ்வளவு மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தார் என்பதை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்" எனக் கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது "பின்னாளில் ஒரு முறை 'நீ கவுரி ஷிண்டேவின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை' என்று அம்மா என்னிடம் தெரிவித்திருந்தார். கவுரி ஷிண்டேவும் 'நாம் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவோம்' என்று உறுதியளித்துள்ளார். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார் ஜான்வி கபூர். அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவது தான் என்னுடைய கனவு எனவும் அவர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Listen News!