'ஜென்டில்மேன்' என்ற படத்தின் மூலம் ஒரு குரூப் டான்ஸராக திரையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவரது கடின உழைப்பினால் நடிகர், இயக்குநர் என உயர்ந்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நாயகனாக வலம் வருகின்றார்.
இந்நிலையில் இன்று தன்னுடைய 46ஆவது பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாடி வரும் ராகவா லாரன்ஸுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும் தீவிர ரஜினி ரசிகரான லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
அந்த சமயத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ராகவா லாரன்ஸ் "தலைவரும் குருவுமான ரஜினியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துடன் ஆசியும் பெற்றேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாதது" என நெகிழ்ச்சியுடன் கூறி பதிவு ஒன்றினையும் இட்டிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது இந்த நாளில் இருந்து தான் புதிய முடிவொன்றை எடுத்துள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். அதாவது "ஏற்கனவே பல சமூக சேவைகள் செய்து வரும் நான், இனிவரும் நாட்களில் அன்னதானம் செய்யவுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும் "பசியின் கொடுமை எனக்கு நன்றாகவே தெரியும், அதனால் என்னால் முடியும் நேரங்களில் நானே நேரில் சென்று பசித்திருப்பவர்களுக்கு உணவு வழங்க உள்ளேன், அதற்கு உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை" எனவும் கூறிப் பதிவிட்டுள்ளார்.
பொதுவாகவே ராகவா லாரன்ஸ் பல சமூக சேவைகளையும், தனிப்பட்ட முறையில் சிலருக்கு பொருளாதார உதவிகள், மருத்துவ உதவிகள் எனப் பல உதவிகளை செய்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய பிறந்தநாளில் இருந்து அன்னதானமும் செய்ய முடிவெடுத்துள்ளது ரசிகர்களிடமிருந்து மட்டுமல்லாது, திரைப்பிரபலங்கள் பலரிடமிருந்தும் வரவேற்பை பெற்றுள்ளது. ராகவா லாரன்ஸின் உடைய இந்த முயற்ச்சி வெற்றிபெற வேண்டும் எனப் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Listen News!