தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஆர்.கே.செல்வமணி. நடிகை ரோஜாவின் காதல் கணவரான இவர் தற்போது இயக்குநர் சங்கத்தின் தலைவராகவும் மற்றும் தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ஃபெப்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவரின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அதாவது தன்னுடைய தனிப்பட்ட வேலையின் நிமித்தமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள கண்ணம்மாள் தெருவுக்கு சென்ற செல்வமணி, அங்கு தனது இன்னோவா காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த இடத்துக்கு நடந்து சென்றுள்ளார்.
தான் சென்ற அலுவலை முடித்து விட்டு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வமணி, இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் விசாரித்திருந்தார்.
அங்கிருந்தவர்கள் கூறிய தகவலின்படி ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் கல்வீசி கார் கண்ணாடியை உடைத்தது தெரியவந்துள்ளது. உடனடியாக சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்துக்கு சென்ற செல்வமணி அங்கு இதுகுறித்த புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
அவரின் புகாரை பெற்றுக்கொண்ட விருகம்பாக்கம் போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை ஆரம்பித்து உள்ளனர்.
அதுமட்டுமல்லாது ஆர்.கே.செல்வமணி ஃபெப்ஸி தலைவராகவும் இருப்பதால் முன் விரோதம் காரணமாக அவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதா, அல்லது அவரைத் தாக்க வந்தவர்கள் தான் அவர் இல்லாததால் கார் கண்ணாடியை மட்டும் உடைத்தனரா எனப் பல கோணத்திலும் போலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆனது அங்கிருந்தவர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு, அப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
Listen News!